Thursday, April 26, 2018

அது வேறு இது வேறு

ஒன்றை மட்டும்
உனக்குச் சொல்கிறேன்

அது வேறு
இது வேறு

முதுகில் குத்தியதால்
குப்புற விழுந்தேன்
குதூகலித்துக் கூக்குரலெழுப்பினாய்

கண்ணீரோடு கவனமாய் எழுந்தேன்

உன்னை என் கனவுக்குள்கூட
நுழைய அனுமதியேன் 
என
மனம் அடங்குச் சட்டம் இயற்றி

சற்றுமுன் ஒரு தகவல்

எழவே முடியாத வகையில்
இடர்ப்பாடுகளுக்கிடையே நீயென

உன் முட்டைக் கண்களில்
கண்ணீர் மூட்டைகள்
கவிழ்ந்தபடியும் கவிழாமலும்

இது
செவிமடல்கள் உரசிவிழுந்தச்
செய்திதான்

இருந்தும்

துரோகியின் குரல்வளையில்
துக்கம் கூடுகட்டுகிறபோதுகூட
கண்ணீர்க் கட்டில்போடுகிறது
என் கண்களில்

இந்த நேரத்தில்

ஒன்றை மட்டும்
உனக்குச் சொல்கிறேன்


உன் கண்ணீர் 
அது வேறு

என் கண்ணீீர்
இது வேறு

பொதுவுடைமைத் தனிவுடைமை

என்னதான்
இருள்புயல் அடித்தாலும்
கதிர்க் கிரண வாளெடுத்து
அப்புயலின் கழுத்தைப் பொசுக்கென்று அறுக்கும்

சூரியன் அமரமுடியாத கிளைகளிலும் இலைகளிலும்
நுண்ணறிவுப் புழைகளிலும்
நூதனமாய் அமர்ந்து
நுரைத்துப் பொங்கிச் சிரிக்கும்

பேணவே முடியாப் பேய்நிமிடங்களில்கூட
ப்ரியம் தளர்வின்றி தலைகோதும்

உலகம் பார்க்கவேவியலாத
ஓர் மர்மதேசத்தில்
உயர்விவாசாயக் குணத்தோடு
உள்ளுக்குள்ளேயே
களைபறித்து உரமிடும்

மழை கேட்டால் போதும்
மழைநாட்டையே
மனதிலும் மண்ணிலும்
உருருளவிடும்

பால்வேறுபாடுகள் உடையும்
பகைக்கூறுகள் கிழியும்
பாஷாந்திரம் அழியும்
தேசாந்திரச் சட்டை அவிழும்
திமிரே அம்மணமாகும்
திசைகளெட்டும்
திருவிழா வெளிச்சம் அணியும்

கண்களில் மினுக்கும் நீரில்
காதல்-அன்பை மட்டுமே
இருப்பு வைக்கும்
கனவிலும் தன்னைக் காவிட்டுக்
கனத்தப் புன்சிரிப்பைக் கண்ணுக்குள் தேக்கும்

எத்தனை சொந்தங்கள் இணைந்தாலும் பிணைந்தாலும்
எண்ணெய்-தண்ணீர்-கண்ணாடி போல
நம்மையே நமக்குக் காட்டும்
நட்பு மட்டுமே

செத்துபோன பின்பும்
உயிர் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கும் நட்புடன்

நட்பு நாட்டுடைமைதான்
ஆனால்
நண்பன் மட்டும்
பொதுவுடைமைத் தனிவுடைமை

இதென்ன...

இதென்ன?...

இருதயத்தின் இண்டு இடுக்குகளெங்கும்
ஏதோ ஒரு திரவம் விரவி வழிகிறது
நாளங்கள் வழியே
கூத்தாடி கூத்தாடி
விழிகளை வெளித்தள்ளி வெள்ளக்காடாய் முகவெளிகளில்

காதல் காமம் வன்மம் குரூரம் கடந்த
மொழியே அறியா முழுவுணர்வா?

துண்டு துண்டு செல்களின் மீது
நிரம்பி விரியும் குதூகலக் கூடாரம்

களமும் போரும் கண்முன் மிரட்ட
“என்ன செய்துவிடும் என்னை?”
மனோபாவம் தோள் தட்ட

நிஜம் மட்டுமே நுரைத்துச் சிரிக்கும்
நிமிடங்கள்தான் நீளும் இனி…

இதென்ன?

இருதயத்தின் இண்டு இடுக்குகளெங்கும்
ஏதோ ஒரு திரவம் விரவி வழிகிறது

Wednesday, April 25, 2018

பிய்த்தெறிந்துவிட்டுப் போ...



எந்தக் கூட்டில்தான் கிடக்கிறது
என் தாய்ப்பறவையின் சிறகுகள்?

எந்தக் காட்டில்தான் இருக்கிறது
என் முன்னோர்களின்
முகவரி சொல்லும்
மரங்களும் கிளைகளும்?

சிறிய கால்வாய்கள் கூடவா
மிச்சமில்லை
என் பாட்டன்கள்
தண்ணீர் தெறிக்க விளையாடியவை

பிரியமாய் என் பாட்டிகள் தொழுத
காதற் பெருமாள் கோயில்கள்
கண்பறிக்கும்
சிவப்புச் சேலை அம்மன்கள்

குறைந்தபட்சம்
என்னவர்களின் உயிர் மூச்சையும்
அந்தரங்கத்தின் பெருமூச்சுகளையும்
மூங்கில் கழிகளிலும் கீற்றோலைகளிலும்
சேமித்துக் காத்தக்
கூரை வீடுகளேனும்

இப்படி நீ கேட்பினும்

எந்தப் பதிலும் உன் கேள்விக்கு
விரோதி மவுனம்
காப்பதென்றானப் பின்

பேசிப் பயனில்லை
பிய்த்தெறிந்துவிட்டுப் போ...

தனிப் பறவையாகு
தனிக் கூடு அமை
முடியும் அதன்வழியே
தனி வீடும்
தனி நாடும்!

ரா.ராஜசேகர்

(நாடு தொலைத்தோரின் மனக்குரல்)

மழைச்சிறகுகள்

சடச்சடவெனச் சாத்தியடிக்கும்போதும்
தடதடவெனத் தண்ணீர்த்தந்தியடிக்கும்போதும்
கிடுகிடுக்கும் இடியிசையில் கிண்ணாரம் வாசிக்கும்போதும்
மனதிற்குப் பிடித்த
பகிரங்க ரகசிய வன்முறையை
மண்ணில் நிகழ்த்தும் மழை

மழை மழை மழை
மண்ணில் பெய்திடினும்
கண்ணுள் இறங்கிடினும்
மனதுள் வழிந்திடினும்
மழை மழை மழையே

கூடும்போதும்
கூடித் தளரும்போதும்
போதும்போதும் என்றாலும் போர்வைக்குள்ளும் பெய்யும்
சிற்றின்பச் சிருங்காரப் பிடிவாதம் மழை

முகமறியா உயிர்களுக்குள்ளும் ஒற்றைச் சிற்றிசைச் சிரிப்பால்
ரத்தவெறிக் கூட்டையும் பிய்த்தெறியும் பிஞ்சு மழலை மழை

மோதியடித்து மூர்க்கமாய் எழும் கடலலை நேற்றைய மழை
கோதிமுடித்தும் காதோரம் வழிந்து எழுந்து விழும் காதல்மழை
ஊதிய குழலாய் தேகமெங்கும் பரவிவழிந்து பரபரக்கும் கல்யாணமழை

கம்பளி-போர்வை எதுவாயினும்
இழுத்துப் போர்த்துவதும்
எடுத்து வீசுவதும்
இரண்டும் நிகழும்
இம்மழைச் சுகப்போராட்டத்தில்

எப்போதும் ஜன்னலோரம்
எப்போதும் மொட்டைமாடி
எப்போதும் தென்னைமரம்
எப்போதும் துளிரிலைகள்
எப்போதும் நீர்க்குமிழ்கள்
எப்போதும் இதயத்துளிகள்
எப்போதும் இணையும்துளிகள்
எப்போதும் அழகுதான்
அடர்மழையது
இருதயத்திற்குச் சிறகுதான்

மழை மழை மழை
மண்ணில் பெய்திடினும்
கண்ணுள் இறங்கிடினும்
மனதுள் வழிந்திடினும்
மழை மழை மழையே

ரா.ராஜசேகர்